ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்
ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை, ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி ஒன்றில் கொட்டி மீள்சுழற்சி செய்வதற்கும், சேதனப் பசளை தயாரிப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கெதிராக பெருந்தோட்ட மக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செனன், ரொத்தஸ், எபோஸ்லி மற்றும் ஸ்ரதன் ஆகிய தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் குறித்த கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பெயர்ப்பலகை திறக்கப்பட்டு, பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுநாளே பொதுமக்கள் இந்த எதிர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.
ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் திரண்ட போராட்டக்காரர்கள், 'இயற்கை வளங்களை அழிக்க வேண்டாம்', 'ஹட்டன் குப்பைகளை ஹட்டனிலேயே கொட்டுங்கள்', 'ஹட்டன் குப்பை எங்களுக்கு வேண்டாம்' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாகச் சென்ற மக்கள், கழிவுகளைக் கையாளுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் ஒன்றுகூடி தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
இந்தப் போராட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரும் கலந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், திட்டம் தொடர்பில் தனது கருத்துக்களையும் முன்வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்:
"நாட்டின் பொருளாதாரத்திற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக உழைத்து வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவரவும் நாங்கள் வாக்களித்தோம். ஆனால், மக்கள் வாழும் இந்தப் பகுதிகளில் முறையான அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தித் தராத அதிகாரிகள், தற்போது குடியிருப்புகளுக்கு அருகிலேயே குப்பைகளைக் கொட்டி மீள்சுழற்சி மையத்தை அமைக்க முற்படுகின்றனர்.
மக்களின் கருத்துக்களைக் கேட்டறியாமலும், கலந்துரையாடல்களை நடத்தாமலும் தன்னிச்சையான முறையிலேயே இந்த இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது" என மக்கள் சுட்டிக்காட்டினர்.
போராட்டத்தின் இறுதியில் மக்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றபோதிலும், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.