திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!
திருகோணமலை, அனுராதபுர சந்தி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றிற்குள் நேற்றைய தினம் (18) இரவு 9:45 மணியளவில் புகுந்த இரு நபர் கொண்ட கொள்ளைக் குழுவினர், ஊழியர்களை அச்சுறுத்தி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இரு கொள்ளையர்களும், டி-56 (T-56) ரக தாக்குதல் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்த ஊழியர்களைப் பயமுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, பணப் பதிவேட்டிலிருந்து கைப்பற்றிய கொள்வனவுப் பையன்றில் பணத்தை நிரப்புமாறு ஊழியர்களை நிர்ப்பந்தித்துள்ளனர்.
இதன்போது, பணப் பையை வைத்திருந்த நபரை ஊழியர் ஒருவர் தடுக்க முயன்ற வேளையில், அங்கிருந்த ஊழியர்களை அச்சமடையச் செய்யும் நோக்கில் துப்பாக்கியைக் கையிலிருந்த நபர் வான்நோக்கிச் சுட்டுள்ளார். அதன் பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
ஆயுதம் ஏந்திய நபர்கள் ஊழியர்களை அச்சுறுத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், மிஹிந்துபுர பகுதியில் வைத்து இக் குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.