மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியில், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் வீதி மறிப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரொருவர் திடீரென வீதியில் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக வீதிப் போக்குவரத்துச் சோதனையில் பொலிஸார் ஈடுபட்டிருந்துள்ளனர். இதன்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞரை பொலிஸார் நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை அடுத்து, மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திய அவ்விளைஞன், கணப்பொழுதில் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்ற நிலையை அடைந்துள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட அங்கிருந்தவர்கள் மற்றும் பொலிஸார், அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் திடீர் மாரடைப்பினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.