தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா
நாட்டில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் அனைவரும் ராஜபக்ஷ ஆட்சியின் போதே உருவாக்கப்பட்டவர்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா சாடியுள்ளார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்:
"நாட்டில் நாளுக்கு நாள் பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் தேசிய பாதுகாப்புக்கு பாரிய சவாலாகும். எனவே, பாதாள உலகச் செயற்பாடுகள் உடனடியாகவும் முழுமையாகவும் ஒடுக்கப்பட வேண்டும்.
இன்று பாதாள உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவர்களே ஆவர். தற்போதைய சூழலில் அவர்களின் செயற்பாடுகள் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. அவர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, அவர்களின் குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றன.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விசாரணைகளின் மூலம் விரைவில் நியாயமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய சில நபர்கள் குறித்தே தற்போதும் மீண்டும் பேசப்பட்டு வருகின்றது.
இவ்விசாரணைகள் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தேவைக்கேற்பவும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அழுத்தத்தினாலுமே முன்னெடுக்கப்படுவதாக சிலர் போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். புலம்பெயர் அமைப்புகள் குறித்த கூற்றுகள் வெறும் அரசியல் லாபத்திற்காகப் பேசப்படுபவை. ஆனால், பாதிக்கப்பட்ட தனது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு பேராயருக்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் இந்த விடயத்தில் சரியான பாதையிலேயே பயணிக்கிறது.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. ஷிரந்தி ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் பேசப்படுகின்றது. நான் அவரைப் பற்றி தனிப்பட்ட ரீதியில் இதுவரை பேசியதில்லை. ஆனால், ராஜபக்ஷ குடும்பத்தின் ஒட்டுமொத்த பரம்பரையும் நாட்டையும் நாட்டு மக்களின் சொத்துக்களையும் சூறையாடியுள்ளது என்பதையே நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.
அவர்கள் செய்த அத்தனை முறைகேடுகளுக்கும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதில் ஷிரந்தி ராஜபக்ஷவும் விதிவிலக்கல்ல; அவருக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்தால், அதற்கு அவர்கள் சட்டத்திற்குப் பதிலளித்தே ஆக வேண்டும்.
மேலும், எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நாட்டை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டும் என யாராவது கருதினால், அது மிகப்பெரிய முட்டாள்தனமான சிந்தனையாகும். அவர் செல்ல வேண்டிய பாதை (சிறைச்சாலை) திறந்தே உள்ளது; அவர் விரைவிலேயே அந்தப் பாதையைச் சென்றடைவார்.
நீண்டகாலமாகப் பொருளாதார ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டை ஓரிரு வருடங்களுக்குள் முழுமையாகக் கட்டியெழுப்பிவிட முடியாது. தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் மூன்று வருடங்களுக்கும் அதிகமான கால அவகாசம் உள்ளது.
எனவே, மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்திற்கு அதன் ஐந்து வருட ஆட்சிக் காலத்தையும் முழுமையாக வழங்க வேண்டும். அந்தக் காலப்பகுதிக்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாகும்" என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.