சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்குக் கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர், ஒரு வார்த்தைக்காக ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டதுடன், மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளைத் திறந்து வைக்குமாறு சவூதி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் ஒரு மதம், "ஒரு அவமதிப்பாகக் கருதப்படும் செயலால் குறைந்துவிடாது" என்று சுட்டிக்காட்டியுள்ள பிரேமதாச, ஒரு வார்த்தைக்குப் பதிலாக ஒரு உயிரைப் பறிப்பதில் அதன் வலிமை தங்கியிருக்கக் கூடாது என்றும் வாதாடியுள்ளார்.
அத்துடன், "ஒவ்வொரு மகத்தான மதத்தின் மையத்திலும் இருக்கும் கருணையை" சவூதி அரேபியா வெளிப்படுத்தும் என தான் நம்புவதாகவும் அவர் தனது பதிவில் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தொழிலாளியான சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாச இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.