ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்: நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அழைப்பாணை குறித்த குழப்பம்
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இன்று அதிகாலை (16) சிங்கப்பூர் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1:10 மணியளவில் அவர் இப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இப் பயணத்தின்போது, ஷிராந்தி ராஜபக்சவின் மகன் ரோஹித்த ராஜபக்சவின் மைத்துனி யான ஆன் டி லிவேரா உடன் சென்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (15) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷிராந்தி ராஜபக்ச, அங்கிருந்து நேராக வானூர்தி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார்.
அவர் வானூர்தி ஏறும் தருணத்தில், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னிலையில் எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் நாள் ஆஜராகுமாறு காவல்துறையினர் அவருக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விசாரணைப் பிரிவால் ஏற்கனவே ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் ஷிராந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.