ஷிராந்தி ராஜபக்ச தொடர்பான குற்றச்சாட்டுக்கு ராஜபக்ச குடும்பம் மறுப்பு!
ஷிராந்தி ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல்களை ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பண்டாரநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்னர், எஃப்சிஐடி (FCID) பிரிவிலிருந்து எத்தகைய அழைப்பாணையும் ஷிராந்தி ராஜபக்ச அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என அந்த குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனை ஒன்றிலிருந்து நேரடியாகவே அவர் வானூர்தி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
"நள்ளிரவு 12:50 மணிக்கு அவரது வானூர்தி புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன்போது, விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அந்தக் கடிதத்தை நுழைவாயிலருகே அவரிடம் வழங்கினார். வாக்குமூலம் வழங்குவதற்காக எஃப்சிஐடி (FCID) பிரிவிலிருந்து இதற்கு முன்பு எத்தகைய அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கவில்லை," என அந்த குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, ஷிராந்தி ராஜபக்ச அவர்கள் விமான நிலையத்திற்கு வந்து நாட்டைவிட்டுப் புறப்படத் தயாரான பின்னரே குறித்த அறிவித்தல் கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினரின் இந்த விளக்கக் குறிப்பானது, இலங்கை பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவினூடாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.