நீதிமன்றில் ஞானசார தேரர் முன்னிலை: தலைமறைவுச் செய்திகள் மறுப்பு
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையானார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இதனை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில நாட்களிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனையில் சுமார் 9 மாதங்களை அவர் கழித்த நிலையிலேயே அப்போதைய ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ராஜகிரிய - நாவல வீதியில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் சென்றதாகவும், ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தமக்கு தெரியாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாகவும் 'தி சன்டே ஐலண்ட்' (The Sunday Island) பத்திரிகை தனது முகப்புச் செய்தியில் தெரிவித்திருந்தது.
எனினும், இக்கூற்றை ஞானசார தேரருக்கு நெருக்கமான வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. அத்தகைய அதிகாரிகள் எவரும் விகாரைக்கு வரவில்லை என்றும், அவர் தலைமறைவாகியிருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையற்றவை என்றும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேல் நடவடிக்கை எதனையும் முன்னெடுப்பதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்புப் பிரதியை எதிர்நோக்கியிருப்பதாக பொலிஸார் தனிப்படத் தெரிவித்துள்ளனர்.
ஞானசார தேரர் இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையான வழக்கானது, அவரது நீதிமன்ற அவமதிப்பு தண்டனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுடன், இஸ்லாம் மதம் குறித்து அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பான விசாரணையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.