இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர புகையிரத வேலைநிறுத்தம்!
புகையிரதத் திணைக்களத்தில் நிலவும் தீர்க்கப்படாத நிர்வாகச் சிக்கல்களுக்குத் தீர்வு கோரி, இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர எச்சரிக்கை வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதிகாரப்பூர்வ வேலைநிறுத்தக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, இரவு அஞ்சல் புகையிரதம் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களுக்கான மாலை நேர விரைவுச் சேவைகள் உட்பட பல நீண்ட தூர புகையிரதச் சேவைகளைப் புகையிரதத் திணைக்களம் ஏற்கனவே ரத்து செய்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். மேலும், சில புகையிரதச் சேவைகள் இலக்கை அடையும் முன்னரே பாதையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டடார்.
தொழிற்சங்க நடவடிக்கைக் குறித்த 14 நாட்கள் அவகாச அறிவித்தல் முன் கூட்டியே வழங்கப்பட்டபோதிலும், உரிய அதிகாரிகளோ அல்லது துறை சார்ந்த அமைச்சரோ தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டதாக புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
புகையிரதப் பொதுப் முகாமையாளரின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்துக் கவலை வெளியிட்ட அவர், தொழிற்சங்க புள்ளிவிவரங்களின்படி தினசரி புகையிரதச் சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், பருவகால பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த 48 மணிநேரத்திற்கு புகையிரதப் பயணிகள் மேலும் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் எனத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.