அரவிந்த டீ சில்வா, அவரது மனைவிக்கு பிடியாணை ! தாயாரின் இறுதிச்சடங்கில் சம்பவம் !!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வாவின் தாயாரின் இறுதிச்சடங்கு புதன்கிழமை (16) கொழும்பில் நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை (14) காலமான அவரது தாயாருக்கு, குடும்பத்தினரும் நண்பர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு எதிரான ஊழல் விசாரணை வழக்கில், பிணையாளர்களாக இருந்த அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், இருவருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
தாயாரின் இறுதிச்சடங்கு காரணமாகவே அரவிந்த டி சில்வாவினால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாமல் போயுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி ஒருவர், அரவிந்த டி சில்வா இந்த வழக்கில் சந்தேகநபர் அல்ல என்றும், பிணையாளராக முன்னிலையாகத் தவறியமையினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரவிந்த டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகி கோரிக்கை விடுப்பதன் மூலம், சாதாரண நீதிமன்ற நடைமுறைகளின் கீழ் இந்த பிடியாணையினைத் திரும்பப் பெற முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.