ட்விட்டர் மூலம் வருமானம் சம்பாதிப்பது எப்படி ?
ட்விட்டரை வாங்கியதன் பின்னர் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட எலோன் மஸ்க், ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
ட்விட்டர் ப்ளூ டிக் என்றழைக்கப்படும் பணம் செலுத்தி, மதிப்பு மிக்க தகமை அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதும் அதில் ஒன்று. ப்ளூ டிக் என்ற பிரத்தியேக வசதி பெற்றுக்கொண்டோருக்கு பல்வேறு மேலதிக வசதிகள் ட்விட்டர் தளத்தில் ஏற்கெனவே இருக்கும் நிலையில், ப்ளூ டிக் பெற்ற பயனாளர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு தொகையை பகிரும் பணி ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இது ஏனைய இடங்களிலும் பரவலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யூடியூபிலும் ஃபேஸ்புக்கிலும் பலர் விளம்பர வருமானம் மூலம் வருமானத்தை ஈட்டி வருகின்ற நிலையில் அது ட்விட்டரிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பின் பின்னர், பலரும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றனர்.
இந்நிலையிலே, ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் ட்விட்டர் விளம்பரம் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை பகிர்ந்துக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.
மிகவும் பிரபல சமூக ஊடகமாக கருதப்படும் ட்விட்டர் செயலிக்கு போட்டியாக த்ரெட்ஸ் செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலி வெளியிடப்பட்டு குறுகிய காலப்பகுதியிலேயே மில்லியன் கணக்கான பயனர்கள் அதில் இணைந்து கொண்டதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
சுமார் இரு ஆண்டுகளுக்கு முன்பு 44 பில்லியன் டொலர்களை கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் கையகப்படுத்தியிருந்தார்.
இந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள ப்ளூ டிக் என்பது முதல் தகைமையாகவிருக்க, பயனாளர்கள் தமக்குச் சொந்தமான படைப்புக்களை ட்விட்டரில் பதிவதன் மூலமாக பார்வைகளின் அடிப்படையில் விளம்பரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.