இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பூரண ஆதரவை வழங்கும்.
இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
அத்துடன், “தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான நடவடிக்கையை அன்புடன் வரவேற்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ”என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று பாரிசில் இன்று இடம்பெற்றது.
“பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் செயற்படும் விதம் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பூரண ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான உரையாடலின் பின்னர் டுவிட்டரில் ஜோர்ஜீவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.