ஆஸ்திரேலியா அதிரடி: சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர தடை!
ஆஸ்திரேலியாவிற்கு உயர்கல்வி பெறச் செல்லும் சர்வதேச மாணவர்கள், இனி தங்கள் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்து வருவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் ரத்து செய்யவுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டோனி பார்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய கொள்கையின் கீழ், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு உயர்கல்விக்காக வரும் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணைவரையோ அல்லது தங்கி வாழ் குடும்ப உறுப்பினர்களையோ தானாகவே உடன் அழைத்து வர முடியாது.
விதிவிலக்குகள் மற்றும் தளர்வுகள்
இருப்பினும், முனைவர் பட்டப் படிப்பை (PhD) மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பசிபிக் , ஆசியான் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்புதிய கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இம்மாற்றங்கள் அனைத்தும் இனிமேல் விண்ணப்பிப்போருக்கே பொருந்தும். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் சர்வதேச மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிகர இடம்பெயர்வைக் குறைக்கும் திட்டம்
ஆஸ்திரேலிய அரசாங்கம் நாட்டின் நிகர வெளிநாட்டு இடம்பெயர்வை பெருமளவில் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் 2027-28 நிதியாண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 2,25,000 ஆகக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காகும்.
மேலும், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலத்தை நீடிப்பதற்காகப் பல்வேறு விசா பிரிவுகளுக்குத் தொடர்ந்து மாறும் 'விசா தாவுதல்' (visa hopping) முறையைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த கால தரவுகள்
'ஏபிசி நியூஸ்' (ABC News) ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த நிதியாண்டில் 3,37,000 க்கும் அதிகமான மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சார்ந்திருப்போர் பிரிவின் கீழ் சுமார் 46,000 துணை விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள விதிகளின்படி, சர்வதேச மாணவர்கள் தங்களின் மாணவர் விசா விண்ணப்பத்துடன் கணவர்/மனைவி மற்றும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
விசா அமைப்ப தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், நாட்டின் குடிவரவு முறையை அரசாங்கம் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமே இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் டோனி பார்க் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் தங்கிப் படிக்கத் திட்டமிட்டிருந்த சர்வதேச மாணவர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.