ஈரானில் அமெரிக்கா போர் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை
ஈரானின் தென்பகுதியில் அமைந்தள்ள மினாப் நகரின் பாடசாலை ஒன்றின் மீதான தாக்குதல் உட்பட, அங்கு அமெரிக்கா நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் போர் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானின் அரசாங்கம் தனது சொந்த மக்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறித்த குழு குற்றம் சுமத்தியுள்ளது.
பங்களாதேஷைச் சேர்ந்த சட்ட வல்லுநர் சாரா ஹொசைன் தலைமையிலான இந்த உண்மை கண்டறியும் குழு, 2022 ஆம் ஆண்டு ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட பேரவையில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது.
அமெரிக்காவின் இலக்கற்ற தாக்குதல்கள்
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களின் போது, மினாப் நகரில் உள்ள ‘ஷஜரே தய்யிபே’ பாடசாலை மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெருமளவிலான சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐ.நா குழு, "பெப்ரவரி 28 தாக்குதல்களைத் தொடர்ந்து, பொதுமக்கள் உயிரிழப்பதற்கும் சிவிலியன் சொத்துக்கள் சேதமடைவதற்கும் வழிவகுக்கும் வகையில் அமெரிக்கா இலக்கற்ற தாக்குதல்களை நடத்தியதன் மூலம் போர் குற்றங்களை இழைத்துள்ளது என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன" எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலை கட்டடமே பிரதான இலக்காக வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாகவும், இது தவறான வழிகாட்டுதலால் இடம்பெற்ற விபத்து அல்ல என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் லாரமர் (Lamerd) நகரில் உள்ள குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலிலும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், இத்தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்கா இதுவரை நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.
ஈரான் அரசின் மனித உரிமை மீறல்கள்
மறுபுறம், ஈரானிய பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான அடக்குமுறைகளைப் பயன்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் மற்றும் மரண தண்டனைகளின் அதிகரிப்பு என்பன மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் கீழ் வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 70க்கும் மேற்பட்டோர் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 73 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.