அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை ரத்து: கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையினை ரத்து செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த டி சில்வாவின் தாயாரின் இறுதிக்கிரியைகள் காரணமாகவே அவர்களால் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாமல் போனதாக அவர்களது சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டினர். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதவான் பாசான் அமரசேன, முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க பிணையில் செல்வதற்காக, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையாளர்களாகப் பிணை நின்றிருந்தனர். இதில் பிரியங்கா நியோமாலி, அரவிந்த டி சில்வாவின் மனைவியின் உடன்பிறந்த சகோதரியுமாவார்.
ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் லஞ்ச விவகாரம் தொடர்பான இந்த வழக்கில், தங்களது பிணைப் பொறுப்புகளை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையினாலேயே, அன்றைய தினத்தின் தொடக்கத்தில் நீதவானால் இவர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த லஞ்ச ஊழல் வழக்கின் முக்கிய சந்தேகநபராகக் கருதப்பட்ட கபில சந்திரசேன அண்மையில் காலமானார். அவரது சடலம் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.