பொருளாதார ஸ்திரத்தன்மையே அடுத்த இலக்கு: IMF குழுவிடம் ஜனாதிபதி அநுர உறுதி!
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதன் மூலமே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் 7ஆவது கட்ட ஆய்வு மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான IVஆவது சரத்து ரீதியிலான கலந்தாலோசனைக்காக இலங்கை வந்துள்ள பிரதிநிதிகளுடனான உயர்மட்டச் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இச்சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் ஈவன் பாபேஜார்ஜியோ தலைமையிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் சவால்கள்
அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் இலங்கை ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணிப்பதை உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவான 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சி நாட்டின் விரைவான மீட்சிக்குச் சிறந்த சான்றாகும் எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வலுச்சேர்த்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் 'டிட்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வரி வருவாய் சேகரிப்பில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் எட்டப்பட்ட ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் மீளவும் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டு
இலங்கையின் அரசாங்க வருவாய் அதிகரிப்பு, நிதி ஒழுக்கம், அந்நிய முதலீடுகளின் வளர்ச்சி மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் ஈவன் பாபேஜார்ஜியோ பாராட்டுத் தெரிவித்தார். 2027ஆம் ஆண்டும் அதற்கு அப்பாலும் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளவில் உயர்வடைந்து வரும் எரிசக்தி செலவீனங்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, நாட்டின் பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்து வருகிறது.
இச்சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.