100 ஆண்டுகளுக்குப் பின் புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைத்தொடரும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ (Yungas) மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு இதுவரை அறியப்படாத முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
‘தற்கால உயிரியல்’ என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய பூனையினத்திற்கு 'லியோபார்டஸ் தில்காயோ' (Leopardus tigrinus / Leopardus pardinoides - Thylcayo Tiger Cat) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று உத்தியோகபூர்வமாக விவரிக்கப்பட்டு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வீட்டுப் பூனையை விட அளவில் சிறியதான இந்த காட்டுப்பூனை, மெலிந்த உடலமைப்பு, புள்ளிகள் நிறைந்த தோல் மற்றும் உருண்டையான காதுகளைக் கொண்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட மரபணு (DNA) பரிசோதனைகளின்படி, இந்த பூனை இனம் சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஏனைய டைகர் கேட் இனங்களிலிருந்து பிரிந்து தனித்துவமாக உருவெடுத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக புதிய பாலூட்டி இனங்கள் அடையாளம் காணப்படும்போது, அவற்றின் மாதிரிப் பொருட்கள் ஏதேனும் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், 'தில்காயோ' பூனையின் எந்தவொரு மாதிரியும் உலகில் உள்ள எந்தவொரு அருங்காட்சியகத்திலும் இல்லாத முற்றிலும் புதிய கண்டுபிடிப்பாகும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
பொலிவியாவின் 'செண்டா வெர்டே' (Senda Verde) வனவிலங்கு காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பாஓலா நோகலேஸ்-அஸ்காரன்ஸ் என்பவராலே இந்த புதிய இனம் அடையாளம் காணப்பட்டது.
உள்ளூர்வாசி ஒருவர் சாதாரண பூனைக்குட்டி என நினைத்து உணவளித்து வளர்க்க முயன்று, பின்னர் அது காட்டுப்பகுதி விலங்கு என்பதை உணர்ந்து வனவிலங்கு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். அதனை ஆராய்ந்தபோதே இந்த புதிய இனம் வெளிச்சத்திற்கு வந்தது.
உள்ளூர் பொலிவிய பழங்குடியின மக்கள் பரம்பரை பரம்பரையாக இந்த பூனையை "தில்காயோ" என்றே அழைத்து வந்துள்ளனர். அவர்களின் பாரம்பரிய அறிவுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் அதே பெயரை அறிவியல் பெயராகவும் சூட்டியுள்ளனர்.
தற்போது தென்னமெரிக்காவில் வாழும் டைகர் கேட் இனங்கள் காடழிப்பு மற்றும் விவசாய நில விரிவாக்கத்தால் வேகமாக அழிந்துவரும் சூழலில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள 'தில்காயோ' பூனையினத்தைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக உயிரியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.