ஆசியாவின் முதன்மைப் பணக்காரரானார் டிக்டொக் நிறுவனர் ஜாங் யிமிங்!
பிரபல 'டிக்டொக்' (TikTok) செயலியின் தாய் நிறுவனமான 'பைட்டான்ஸ்' (ByteDance) நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யிமிங், இந்தியப் பெரும்செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
'ப்ளூம்பெர்க்' (Bloomberg) செல்வந்தர்கள் சுட்டெண் தரவுகளின்படி, இவரது நிகர சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ப்ளூம்பெர்க் நிறுவனம் இவரது சொத்துக்களைக் கண்காணிக்கத் தொடங்கியபோது 13 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த சொத்து மதிப்பு, தற்பொழுது எட்டு மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பைட்டான்ஸ் நிறுவனத்தின் சர்வதேசச் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளமையும், அந்நிறுவனத்தின் 'தௌபாவ்' (Doubao) உரையாடல் மென்பொருள் மற்றும் 'சீடான்ஸ்' (SeaDance) காணொளி உருவாக்கக் கருவி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள பேராதரவுமே இந்த அசுர வளர்ச்சிக்கு முதன்மையான காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்காவில் 'டிக்டொக்' செயலி கடுமையான சட்டப் பரிசீலனைகளையும் தடைகளையும் எதிர்கொண்ட போதிலும், ஜாங் யிமிங் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவுத் துறையில் தீவிர முதலீடுகளை மேற்கொண்டு வந்தார்.
அண்மையில், டிக்டொக் செயலியின் அமெரிக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் பைட்டான்ஸ் நிறுவனம் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அச்செயலியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை தணிந்துள்ளது.
சீனாவில் ஏற்கனவே முதலிடத்திலிருந்த ஜாங் யிமிங், இந்தத் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் தற்போது ஆசிய அளவிலும் முதலிடத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.