‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் 3-ஆம் பாகத்தை அடுத்த நான்கு வார காலத்திற்கு வெளியிடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் இணைத் தயாரிப்பாளரான ‘ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்’ (White Nights Entertainments) நிறுவன உரிமையாளர் ஏ. விஜயசுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரவிந்த் கோஷ், எஸ்.கே. கண்ணதாசன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், "கடந்த 2023-ஆம் ஆண்டு ‘டிமான்ட்டி காலனி’ 2-ஆம் பாகத்தைத் தயாரித்த போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, எதிர்காலத்தில் ‘டிமான்ட்டி காலனி’ என்ற பெயரில் உருவாக்கப்படும் அனைத்துப் பாகங்களையும் மனுதாரருடன் இணைந்தே தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், மனுதாரரின் எவ்வித அனுமதியுமின்றி இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘ஃபேஷன் பிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்துடன் இணைந்து 3-ஆம் பாகத்தைத் தயாரித்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை இணையவழித் திரைத் தளத்திற்கு (OTT) 17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதோடு, திரையரங்குகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்" என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாகச் சமரசத் தீர்ப்பாயத்தையும் அணுகியுள்ளதால், திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் ஃபேஷன் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் இது குறித்துப் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார். அதுவரை இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.