துருக்கியில் பாலியல் சிறுபான்மையினர் அமைப்புகள் மீது அதிரடி சோதனை: 60-க்கும் மேற்பட்டோர் கைது!
துருக்கியில் பாலியல் சிறுபான்மையினரின் (LGBTQ) உரிமைகளுக்காகச் செயல்படும் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து, அந்நாட்டுப் பொலிஸார் மேற்கொண்ட நாடு தழுவிய அதிரடிச் சோதனைகளில் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர் மற்றும் மெர்சின் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைந்துள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதிகள் (Gay bars), உரிமை அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் வீடுகளை இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை இச்சோதனைகள் நடத்தப்பட்டன. இச்சோதனைகளின் போது குறைந்தது 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கியின் அரசுச் செய்தி நிறுவனமான 'அனடோலு' (Anadolu) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
"குடும்பத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கை"
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துருக்கிய நீதி அமைச்சர் அக்கின் குர்லெக் , குழந்தைகள், குடும்பக் கட்டமைப்பு மற்றும் பொது அமைதியைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
"என் குடும்பம் பாதுகாப்பானது" (My Family is Safe) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இச்சோதனைகளின் மூலம், 162 சந்தேகநபர்கள், 9 அமைப்புகள் மற்றும் 13 வணிக நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, அதிபர் ரஜப் தய்யிப் எர்டோகனால் அறிவிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கான "குடும்பம் மற்றும் மக்கள்தொகை தசாப்த" திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சோதனைகளுக்குச் சில நாட்களுக்கு முன்னதாக, பாலியல் சிறுபான்மையினர் மற்றும் எச்.ஐ.வி (HIV) விழிப்புணர்வு அமைப்புகளின் இணையதளங்கள் அதிகாரிகளால் முடக்கப்பட்டிருந்தன.
மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்பு
இச்சோதனைகளின் போது 'காவோஸ் ஜி.எல்' (Kaos GL) எனும் முன்னணி LGBTQ உரிமை அமைப்பின் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு, அதன் முக்கிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் சிறுவர்கள் பார்க்கும் வகையில் "ஆபாசமான கருத்துகளை" பரப்பியதாக இவ்வமைப்பின் மீது தலைநகர் அங்காராவின் நீதித்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை, துருக்கிய அரசின் இந்நடவடிக்கைக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. "குடும்பப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசு திட்டமிட்ட பாகுபாட்டையும், அச்சத்தின் அரசியலையும் முன்னெடுத்து சிவில் சமூகத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது" எனத் துருக்கிய மனித உரிமைகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் துருக்கிக்கான விசேட பிரதிநிதி நாச்சோ சான்செஸ் அமோர், இக்கைது நடவடிக்கைகளை "அரச ஒடுக்குமுறையின் அதிர்ச்சியளிக்கும் உச்சக்கட்டம்" என வன்மையாகக் கண்டித்துள்ளார்.
துருக்கியின் ஆளும்கட்சியான 'ஏ.கே' கட்சி, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 'இஸ்தான்புல் பிரைட்' (Istanbul Pride) பேரணிகளுக்குத் தடை விதித்துள்ளதோடு, அதன்பின்னர் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் பேரணிகளைப் பொலிஸ் பலத்தைப் பயன்படுத்தி ஒடுக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.