விமல் வீரவன்சவின் உரை நீதிமன்ற அவமதிப்பா? விசாரணைக்கு உத்தரவு!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியொன்றில் உரையாற்றிய விமல் வீரவன்ச, வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையையடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதன்போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, விமல் வீரவன்சவின் உரைகள் அடங்கிய குறுந்தகட்டினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், இது குறித்து பரிசீலித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த பிரதான நீதிவான், குறித்த கருத்து நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட முடியுமா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்தார்.