வங்காள விரிகுடாவில் புயல் சின்னம்: ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் பயணிக்கின்ற பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (18) மாலை 5:00 மணி முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்கே நிலவும் வளிமண்டலக் கலக்கமானது , அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாளை (19) ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் (kmph) வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, கடல் கொந்தளிப்பாகவோ அல்லது அவ்வப்போது மிகக் கொந்தளிப்பான நிலையிலோ காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, குறித்த ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.