மின்சார மோட்டார் சைக்கிள் சர்ச்சை: குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தது பொலிஸ்!
அனுராதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தீர்வையற்ற மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில், "புரவேசிய" (Purawesiya) அமைப்பின் அமைப்பாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
பொலிஸ் மா அதிபருடனான தனிப்பட்ட தொடர்பின் அடிப்படையில், அனுராதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், குறித்த தொழிலதிபருக்கு அவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் போனமையினால் மோட்டார் சைக்கிள் விநியோகம் தாமதமாகியுள்ளது என்றும் அக்காணொளியில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், இக்க குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் ஆதாரமற்றவை என பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கீழ்நிலை உத்தியோகத்தர்கள் முதல் பொலிஸ் பரிசோதகர் தரம் வரையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்புரிக்காக தீர்வையற்ற மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டம் ஒன்றே தயாரிக்கப்பட்டு, அதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்திற்கு அமைச்சரவை கொள்கை அளவிலான அனுமதியை வழங்கியுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களுக்கான சுங்க வரியை பொலிஸ் வெகுமதி நிதியத்தின் மூலம் செலுத்துவதற்கும் அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக பொலிஸ் மா அதிபரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நாளிதழ்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் தேசிய போட்டித் தன்மை கொண்ட கோரிக்கை முன்மொழிவு செயல்முறையின் ஊடாக முன்மொழிவுகளைப் பெறுமாறும், தகுதியான நிறுவனங்களுக்கு மோட்டார் சைக்கிள்களை விநியோகிக்கும் வாய்ப்பை வழங்கி, உத்தியோகத்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொள்வனவுகளை மேற்கொள்ளுமாறும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை வரும் வாரங்களில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் திணைக்களம், சரியான சரிபார்ப்பு இன்றி இவ்வாறான போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபர் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்ட அமலாக்கம் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.