சுரேஷ் சாலேயின் மனு மீதான தீர்மானம் நவம்பர் 27 இல் அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அடிப்படையில் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல் செய்துள்ள ரீட் மனுவை மேலும் விசாரிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (18) அறிவித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு தொடர்பிலான வாய்மொழிச் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையிலேயே இந்தத் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரான சுரேஷ் சாலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, நீண்ட வாதப் பிரதிவாதங்களை அடுத்துத் தனது பதில் சமர்ப்பணங்களை இன்று நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்குடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் தங்களது எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களை எதிர்வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
அத்துடன், இந்த மனுவில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணங்கள் தொடர்பான கோரிக்கைகள் மீதான தீர்மானமும் அன்றைய தினமே (நவம்பர் 27) அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.