சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வழக்கு: இலங்கை வெளிவிவகார அமைச்சு விளக்கம்
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் வழக்கு நிலைமைகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேன்முறையீட்டு விசாரணையின் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துவரும் நிலையிலேயே வெளிவிவகார அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் (செப்டம்பர் 18) வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் இணைந்து இந்த வழக்கின் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜதந்திர வழிகள் ஊடாகச் சவூதி அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாகவும், சிவராசா அனோஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலையோ, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் விவரங்களையோ, மேன்முறையீட்டின் முடிவையோ அல்லது அவரது தற்போதைய சட்டப் பூர்வ நிலையையோ வெளிவிவகார அமைச்சின் அறிக்கை உறுதிப்படுத்தவில்லை.
வழக்கின் பின்னணி:
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று இஸ்லாம் மார்க்கத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். இலங்கையிலுள்ள மதச் சமூகங்களுக்கு இடையே இடம்பெற்ற இணையவழித் தர்க்கத்தின் போதே இந்தக் கருத்துப் பதிவிடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, கடந்த ஜூலை 15 ஆம் திகதி சவூதி நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. தண்டனையைக் குறைக்கும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் அவரது சட்டத்தரணி மேன்முறையீடு செய்தார்.
எனினும், அந்த மேன்முறையீட்டின் முடிவில் அவரது தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வத் தீர்ப்புப் பிரதிக்காக இலங்கைத் தூதரகம் காத்திருப்பதுடன், அதன்பின்னரே இந்த முடிவிற்கான சட்டபூர்வ பின்னணி தெளிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாணக்கியன் MP கடுமையான குற்றச்சாட்டு:
இதேவேளை, இந்த விவகாரத்தைக் கையாண்ட விதத்தில் வெளிவிவகார அமைச்சு கடுமையான குளறுபடிகளை இழழைத்துள்ளதாகச் சாட்டி, அனோஜனின் உயிரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
மேன்முறையீடு வெற்றியடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் மதிப்பீடு செய்திருந்த போதிலும், வெளிவிவகார பிரதிமைச்சர் அருண் ஹேமச்சந்திர வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே குடும்பத்தினர் மேன்முறையீட்டை முன்னெடுத்தனர்.
அதற்காக சட்டக் கட்டணமாகக் கோரப்பட்ட 1,890,766 ரூபாயை வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குரிய கணக்கில் குடும்பத்தினர் வைப்பிலிட்டுள்ளனர்.
அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் ஆவணங்களின்படி, மேன்முறையீடு ஓகஸ்ட் 24 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆவணங்களை முன்னரே தருமாறு குடும்பத்தினர் பலமுறை கோரியும், செப்டம்பர் 16 ஆம் திகதியிட்ட கடிதத்தின் மூலமே மேன்முறையீட்டு ஆவணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு மனுவில் அட்லான் அப்துல்லா அல்-சுபை என்ற சட்டத்தரணியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினரின் அனுமதி அல்லது முன் அறிவித்தல் இன்றி முற்றிலும் வேறொரு சட்டத்தரணியே நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியைத் தேர்வு செய்து அறிவுறுத்தல்களை வழங்கியது யார், குடும்பத்தினரிடம் வசூலிக்கப்பட்ட சட்டக் கட்டணம் எவ்வாறு செலவிடப்பட்டது மற்றும் மேன்முறையீட்டு ஆவணங்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன என்பன குறித்து சாணக்கியன் MP கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்தும் கொன்சியூலர் கடமைகள் குறித்தும் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அனுபவம் வாய்ந்த சுயாதீன சட்டத்தரணிகளை நியமிக்கவும், எஞ்சியுள்ள அனைத்து சட்ட மற்றும் மன்னிப்புப் பொது நடைமுறைகளையும் முன்னெடுக்கவும், சவூதி அரேபியாவுடன் மிகயுயர் மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அரசாங்கத்திற்கு அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.