சமூக வலைத்தள போதைப்பொருள் காணொளி: 11 வயது சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில்
சமூக வலைத்தளங்களில் 11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று வைரலாகி வரும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த காணொளி இணையதளங்களில் பரவியதை அடுத்து, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் உடனடியாக தலையிட்டு இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
பொலிஸ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் ஆலோசனையின் பேரில், பிரதம பொலிஸ் பரிசோதகர் நிமாலி பொன்சேகா மற்றும் பொலிஸ் பரிசோதகர் கண்டிபன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் செப்டம்பர் 18ஆம் திகதி கணேமுல்ல, சுமேத மாவத்தையில் உள்ள வீடொன்றில் வைத்து அச்சிறுவனை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அச்சிறுவன், பொலிஸாரால் பாதுகாப்பாக பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, அச்சிறுவன் அவனது தாயாருடன் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறுவனின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.