கொங்கோ பாடசாலையில் ஏற்பட்ட கோரத் தீ விபத்து: 26 பேர் பரிதாபப் பலி!
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அதிபயங்கர தீ விபத்தில், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெற்கு கிவு மாகாணத்தின் புகாவு நகரில் அமைந்துள்ள சிம்பண்டா பிரதேசத்தில் இயங்கிவரும் குறித்த பாடசாலையிலேயே கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
வழமை போல் கல்விச் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரெனக் கட்டடத்தில் தீப் பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்டதும் பாடசாலைச் சமூகத்தினரிடையே பெரும் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்ததும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் , நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆயினும், இந்தத் தீ விபத்தில் சிக்கி 19 மாணவியரும், 4 மாணவர்களும் உட்பட மொத்தம் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு அரச அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து, இத்துயர விபத்துக்கான மூலக் காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.