கொக்கைன் வழக்கு: நடிகர் விஷ்வ கொடிகாரவிற்கு அபராதம்!
கொக்கைன் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் விஷ்வ கொடிகாரவிற்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து கல்கிஸ்ஸே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வியாழக்கிழமை (17) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான நடிகர் விஷ்வ கொடிகார தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, கல்கிஸ்ஸே நீதிவான் காஞ்சனா நிரஞ்சலா சில்வா இந்த அபராத தண்டனையை விதித்தார்.
வெள்ளவத்தை கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் புதன்கிழமை (16) இரவு வெள்ளவத்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார். இதன்போது போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் இவரும் அடங்குவதுடன், கைது செய்யப்பட்ட அனைவரும் கல்கிஸ்ஸே நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் நடிகர் விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், சந்தேகநபர்கள் அனைவரும் கட்டாய மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என நீதிவான் இதன்போது கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.