கடலில் தவறி விழுந்த துறைமுக வழிகாட்டி இலங்கை கடற்படையினரால் மீட்பு
கொழும்புத் துறைமுகத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே, வணிகக் கப்பல் ஒன்றிற்குள் நுழைய முயன்றபோது தவறி கடலில் விழுந்த துறைமுக வழிகாட்டி ஒருவரை இலங்கை கடற்படையினர் செப்டம்பர் 17 ஆம் திகதி அதிகாலை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
குறித்த துறைமுக வழிகாட்டி, கொழும்புத் துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவிருந்த வணிகக் கப்பலை பாதுகாப்பாக வழிநடத்திச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கடற்படைக்கு அவசர அறிவித்தல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அண்மித்த கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 'பி 163' (P 163) என்ற உள்நாட்டு ரோந்துக் கலனை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகக் கடற்படையினர் உடனடியாக அனுப்பி வைத்தனர்.
விரைவாகச் செயற்பட்ட கடற்படை வீரர்கள், கடலில் தவித்துக் கொண்டிருந்த துறைமுக வழிகாட்டியைப் பாதுகாப்பாக மீட்டு, துறைமுகக் கட்டுப்பாட்டு கோபுரப் படகுத்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இலங்கையின் தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் மீனவர் சமூகத்தினர் எதிர்கொள்ளும் இதுபோன்ற அவசர கால ஆபத்துகளுக்குத் உடனடியாகப் பதிலளிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர் எப்போதும் விழிப்புடன் செயற்பட்டு வருவதாகக் கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.