உள்நாட்டு மிதக்கும் சூரியமின் நிலையம் திறப்பு: ஆண்டிற்கு $3 மில்லியன் சேமிப்பு!
அரசாங்கத்தின் தேசிய நிலையான சக்தித் திட்டத்தின் கீழ், தம்புள்ளை - இப்பாகமுவ குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட 5 மெகாபவாட் (MW) கொள்ளளவைக் கொண்ட “தியஜனனி” மிதக்கும் சூரியமின் உற்பத்தி நிலையம் இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக தேசிய மின்னுற்பத்தித் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் ஆண்டிற்கு சுமார் 7,500 குடும்பங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அத்துடன், மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 25 இலட்சம் லீட்டர் டீசல் எரிபொருள் பயன்பாடு குறைக்கப்படுவதோடு, ஆண்டிற்கு 6,440 மெட்ரிக் தொன் காபனீரொட்சைட் (CO₂ - Carbon Dioxide) வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டிற்கு ஆண்டிற்கு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (USD) வரையிலான அந்நியச் செலவாணி சேமிக்கப்படும் என அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.
'தியஜனனி பிரைவேட் லிமிடெட்' (Diyajanani (Pvt) Ltd) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில், இது முழுமையாக உள்நாட்டுப் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் திறமையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டமையாகும். மேலும், இதன் கட்டுமானப் பணிகளின் போது அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 150 பேருக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத் பின்னர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கட்டுப்பாட்டு அறை மற்றும் மின் உற்பத்தி நிலையத்தின் இயக்க நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்துடன் இணைந்த சமூக நலன்புரி உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி குறியீட்டு ரீதியாகக் கலந்துகொண்டார். இதன்கீழ்:
ஸ்ரீ விவேகாராம விகாரையின் தர்ம மண்டபக் கட்டுமானப் பணிகளுக்காக 8 இலட்சம் ரூபாயும் ஒரு மின் பிறப்பாக்கியும் (Generator) வழங்கப்பட்டன.
மீனவ சமூகத்தின் சேறு குளங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்காக 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் பசுமைப் பூங்கா ஒன்றை அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அனகட்டாவ ஆரம்பப் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டிற்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்காக 8 இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
வீர மோகன் ஜெயமஹ பாடசாலையில் நீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 4 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவற்றுடன், சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் பல நலன்புரி உதவிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.