அதிவேகப் பாதைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: இன்று நள்ளிரவு முதல் அமல்!
இலங்கையிலுள்ள அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது இன்று (18) நள்ளிரவு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
சாரதிகளுக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு வருட கால அவகாசம் இன்றுடன் நிறைவடடைவதாகப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரணகல ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாளை (19) முதல் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத வாகனங்கள் அதிவேகப் பாதைகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதிக்கு அருகில் அமர்ந்து செல்பவர்கள் மட்டுமன்றி, வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் எனப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். வீதி விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெறும் தண்டப்பணம் அறவிடுவதை நோக்கமாகக் கொள்ளாமல், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தைச் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் முக்கிய நோக்கம் எனச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பின் இருக்கைப் பயணிகளும் இந்த விதிமுறையைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், ஆசனப்பட்டி கட்டமைப்பு வசதி இல்லாத வாகனங்கள் அதிவேகப் பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.