13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்க யோசனை!
13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடுக்கும் வகையிலும், வளர் இளம் பருவத்தினருக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) புதிய திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) இந்தத் திட்டத்தைப் பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த உரையின்போது உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok) போன்ற சமூக ஊடகத் தளங்களினால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கை:
மாநாட்டில் உர்சுலா வொன் டெர் லேயன் உரையாற்றுகையில், "பெரு தொழில் நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிறுவர்களை அடிமையாக்கும் அம்சங்களையோ, அவர்களை எல்லைமீறிய உள்ளடக்கங்களுக்குள் தள்ளுவதையோ, சிறுமிகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தவறாகச் சித்தரிப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய விதிகளின் விவரங்கள்:
13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்: சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படும்.
13 முதல் 15 வயது வரை: பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் "சிறிய கணக்குகள்" மட்டுமே அனுமதிக்கப்படும். இவற்றில் நேரக் கட்டுப்பாடுகளும் குறிப்பிட்ட அம்சங்களுக்கான தடைகளும் இருக்கும்.
15 முதல் 18 வயது வரை: இவர்களது கணக்குகள் பாதுகாப்பான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவுடன் மீண்டும் முரண்பாடு எழுமா?
இந்த முன்மொழிவு சட்டமாக மாறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் விவாதித்து வாக்களிக்க வேண்டும். இதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் நுட்பக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் பெரு தொழில் நுட்ப நிறுவனங்களுடன் இது புதிய முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனினும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டோ பெனிஃபெய் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பெரு தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்ப்பைக் கண்டு ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிபுணர்களின் விமர்சனங்கள்:
13 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு தொடங்குவதை முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவை ஏற்கனவே தடை செய்துள்ள போதிலும், நடைமுறையில் அவை தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அதேநேரம், இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இணைய உரிமை அமைப்பின் கொள்கை ஆலோசகர் சிமியோன் டி புரூவர் , "இத்திட்டம் சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்துமே தவிர, பயனாளர்களை அடிமையாக்கும் சமூக ஊடகங்களின் அடிப்படை வணிக முறையை மாற்றாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய முன்னெடுப்புகள்:
ஏற்கனவே ஸ்பெயின், போர்த்துக்கல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் கட்டுப்படுத்த கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் செயல்படும் என்றும் உர்சுலா வொன் டெர் லேயன் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.